உயர்வும் தாழ்வும் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.03.2025

தோல்வியை 
கண்டு துவளாதீர்.

வாழ்க்கையில் உயர்வும், தாழ்வும் மாறி மாறி வருவது சகஜம். வாழ்வில் எல்லோரும் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பு. உயர்வு வரும் இடத்தில் தோல்விகளும் கூடவே வரும்.

உயர்வும் தாழ்வும் நாணயத்தின் இரு பக்கங்களாக கருத வேண்டும். தோல்வியை கண்டு துவளக் கூடாது. வாழ்வில் ஒரு முறையேனும் தோல்வி ஏற்பட்டால் தான் வெற்றியின் அருமை புரியும். 

சாதாரணமாக ஒருவன் வெற்றியடைந்தால் அவனுக்கு அது பெரிய விஷயமாக தெரியாது. பல முறை தோல்வி கண்டு, வெற்றியை தழுவும் ஒருவனால் தான் அதை உண்மையில் உணர முடியும். 

அவன் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. வெற்றியை கொண்டாடுவான்.

நமக்கு ஏற்பட்ட நிறைய தோல்விகளும் நம் வெற்றிக்கு காரணமாக அமையும். ஒருவர் பெற்ற வெற்றியை தாங்க முடியாதவர்கள், அவரை ஏதேனும் வகையில் தோற்கடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

நாம் வெற்றி பெற்றுக் கொண்டே போகும் போது மற்றவர்களை பற்றி அறிய முடியாது. 

ஆனால், தோல்வி ஏற்படும் போது தான், யார் நல்லவர் கெட்டவர் என்ற சுயரூபம் நமக்கு தெரியும். 

பொதுவாக வெற்றி பெறும் போது நமது நண்பர்கள் கூட எதிரிகளாக மாறுவார்கள். ஆனால், தோல்வி அடையும் போது சில நண்பர்களும் நமக்குக் கிடைப்பார்கள்.

இதெல்லாம் வாழ்க்கையில் சகஜமாக எடுத்துக் கொண்டு எல்லோரிடமும் நட்புடன் பழக வேண்டும். சில தோல்விகள் தான் வேகமாக வளர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். 

தோல்வி வரும் போது அதற்காக துவண்டு போய் சாப்பிடாமல், இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து யோசிப்பதை விட்டுவிட்டு, இதுவும் வெற்றிக்கான பாடமாக எடுத்துக் கொண்டு நேர்மறையாக நமது எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

தோல்வியின் முடிவே உயர்வின் ஆரம்பமாக இருக்கும்.

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்  எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!

வாழ்க  வளர்க

சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி