திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரை ! | Veritas Tamil
இறையரசின் அடையாளமாகவும் அருட்சாதனமாகவும் விளங்கும் திருஅவை, இவ்வுலகில் பயணிக்கும் இறைமக்களின் சமூகமாகும். அது இறுதி வாக்குறுதியிலிருந்து ஆற்றலைப் பெற்று, வரலாற்றின் மாற்றங்களை நற்செய்தியின் ஒளியில் வாசித்து விளக்கம் அளிக்கிறது;
மே 06 , புதன்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சரியாக காலை 10 மணிக்கு தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தொடங்கினார். ‘மக்களினங்களின் ஒளி' என்ற திருஅவைப் பற்றி இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்க ஆவணத்தில் ஏழாம் அதிகாரத்தில் உள்ள 'இறுதிக்கால நோக்கு' (eschatological dimension) என்ற தலைப்பு குறித்து தனது சிந்தனைகளை திருப்பயணிகளுடன் திருத்தந்தை பகிர்ந்துகொண்டார்.
முதலில் திருவெளிப்பாடு நூலிலிருந்து இறைவார்த்தைகள் ஆங்கிலம், இத்தாலி மற்றும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன. இப்போது வாசகத்திற்கு செவிமடுப்போம்.
இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள். அவர்கள், “அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக் குட்டியிடமிருந்துமே மீட்பு வருகிறது” என்று உரத்த குரலில் பாடினார்கள்.
(திருவெளிப்பாடு 7:9-10)
இறைவார்த்தை வாசிப்பிற்குப் பிறகு திருத்தந்தை தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார்.
அன்புள்ள சகோதர் சகோதரிகளே, காலை வணக்கம். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன்!
உண்மையில் திருஅவை இந்த மண்ணுலக வரலாற்றில் பயணிக்கும் போதே எப்போதும் தனது இறுதி இலக்கான விண்ணகத் தாயகத்தை நோக்கியே பயணிக்கிறது. இது ஒரு முக்கியமான பரிமாணம், ஆனால் நாம் பெரும்பாலும் இதைக் கவனிக்கத் தவறுகிறோம் அல்லது குறைத்து மதிப்பிடுகிறோம். ஏனெனில், நம் கண்முன்னே தெரிபவற்றிலும், கிறிஸ்தவ சமூக வாழ்வின் அன்றாடச் செயல்பாடுகளிலும் நாம் அதிக கவனம் செலுத்துவதே இதற்குக் காரணம். "திருஅவை என்பது வரலாற்றின் ஊடாகப் பயணிக்கும் இறைமக்களின் சமூகம்; அதன் அனைத்துச் செயல்பாடுகளும் இறையரசை நோக்கியே அமைந்துள்ளன (cf. LG 9). அன்பு, நீதி மற்றும் அமைதி நிறைந்த இந்த இறையரசைப் பறைசாற்றுவதன் வழியாகவே இயேசு திருஅவையை நிறுவினார் (cf. LG 5)." "எனவே, கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவ மீட்பு என்பது தனிநபர் சார்ந்தது மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அகில உலகிற்கும் (communal and cosmic) உரியது என்பதை உணர்ந்து, நமது வாழ்வின் திசையை விண்ணக மகிமை எனும் அந்த இறுதி அடிவானத்தை (final horizon) நோக்கி நிலைநிறுத்த நாம் அழைக்கப்படுகிறோம். அதன் மூலம், அனைத்தையும் இந்தத் தொலைநோக்குப் பார்வையுடன் அளவிடவும் மதிப்பீடு செய்யவும் நாம் அழைக்கப்படுகிறோம்.
"திருஅவை இவ்வுலகில் இறையரசின் வருகைக்காகப் பணியாற்றி, வரலாற்றில் வாழ்ந்து வருகிறது. வாக்குறுதியளிக்கப்பட்ட இந்த இறையரசின் வார்த்தைகளை திருஅவை அனைவருக்கும் எப்போதும் பறைசாற்றுகிறது. அருட்சாதனக் கொண்டாட்டங்கள், குறிப்பாகத் நற்கருணை வழியாக அதன் அச்சாரம் அல்லது உறுதிமொழியைப் பெற்றுக்கொள்கிறது. மேலும், அந்த இறையரசின் நெறிமுறைகளைத் தனது அன்பு மற்றும் பணி வாழ்வின் வழியாகச் செயல்படுத்தி அனுபவிக்கிறது. கிறிஸ்துவுடனான ஒன்றிப்பு 'மிக நெருக்கமான' முறையில் (LG, 48) நிறைவேறுகின்ற இடமாகவும் கருவியாகவும் தான் இருப்பதைத் திருஅவை அறிந்திருக்கிறது; அதே வேளையில், தனது கண்ணுக்குப் புலப்படும் எல்லைகளுக்கு அப்பாலும், தூய ஆவியாரால் கடவுள் மீட்பை அருள முடியும் என்பதையும் திரு அவை அங்கீகரிக்கிறது.
இது தொடர்பாக, மக்களினங்களின் ஒளி (Lumen Gentium) கொள்கை விளக்க அறிக்கை ஒரு முக்கியமான கூற்றை முன்வைக்கிறது: திருஅவை 'மீட்பின் உலகளாவிய அருட்சாதனம்' (universal sacrament of salvation) ஆகும் (LG, 48). அதாவது, கடவுளால் வாக்குறுதியளிக்கப்பட்ட வாழ்வின் நிறைவு மற்றும் அமைதி ஆகியவற்றின் அடையாளமாகவும் கருவியாகவும் திருஅவை திகழ்கிறது. இதன் பொருள் என்னவென்றால், திருஅவை தன்னை முழுமையாக இறையரசுடன் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை; மாறாக, அது அந்த இறையரசின் விதையாகவும் தொடக்கமாகவும் இருக்கிறது. ஏனெனில், அதன் நிறைவு என்பது காலத்தின் முடிவில்தான் மனிதகுலத்திற்கும் அண்டத்திற்கும் அருளப்படும்." எனவே, கிறிஸ்துவை நம்புவோர் இந்த மண்ணுலக வரலாற்றின் ஊடாகப் பயணிக்கும்போது, நன்மையின் வளர்ச்சியையும் அதே வேளையில் அநீதிகளையும் துன்பங்களையும் சந்திக்கின்றனர். இருப்பினும், அவர்கள் மாயையில் சிக்கி ஏமாறுவதுமில்லை, விரக்தியில் மூழ்குவதுமில்லை; மாறாக, 'அனைத்தையும் புதியதாக்குகிறவர்' (திருவெளிப்பாடு 21:5) வழங்கிய வாக்குறுதியால் வழிநடத்தப்பட்டு வாழ்கிறார்கள்.
எனவே, இயேசுவின் வழியாக இறையரசு 'ஏற்கனவே தொடங்கிவிட்டது' என்பதற்கும், வாக்குறுதியளிக்கப்பட்ட அதன் நிறைவு 'இன்னும் நிறைவேறவில்லை' என்பதற்கும் இடைப்பட்ட நிலையில் திருஅவை தனது பணியை ஆற்றி வருகிறது. நமது பயணத்திற்கு வழி காட்டும் நம்பிக்கையின் ஒளிவிளக்காகத் திகழும் திருஅவை, வாழ்வை முடக்கும் அநீதிகளுக்கு எதிராக உரக்கப் பேசும் பொறுப்பைக் கொண்டுள்ளது. ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், வன்முறை மற்றும் போரினால் பாதிக்கப்பட்டோர் என உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வாடும் அனைவருக்கும் ஆதரவாகத் துணிவுடன் குரல் கொடுப்பதும், அவர்கள் பக்கம் நிற்பதும் திருஅவை யின் முக்கியப் பணியாகும்.
இறையரசின் அடையாளமாகவும் அருட்சாதனமாகவும் விளங்கும் திருஅவை, இவ்வுலகில் பயணிக்கும் இறைமக்களின் சமூகமாகும். அது இறுதி வாக்குறுதியிலிருந்து ஆற்றலைப் பெற்று, வரலாற்றின் மாற்றங்களை நற்செய்தியின் ஒளியில் வாசித்து விளக்கம் அளிக்கிறது; தீமையின் அனைத்து வடிவங்களையும் கண்டிக்கிறது; மேலும், கிறிஸ்து அனைத்து மனிதகுலத்திற்கும் வழங்க விரும்பும் மீட்பையும், நீதி, அன்பு மற்றும் அமைதி நிறைந்த அவரது அரசையும் சொல்லாலும் செயலாலும் பறைசாற்றுகிறது. எனவே, திருஅவை தன்னைப் பற்றிப் பறைசாற்றிக் கொள்வதில்லை; மாறாக, திருஅவையிலுள்ள அனைத்தும் கிறிஸ்துவில் நாம் பெறும் மீட்பையே சுட்டிக்காட்ட வேண்டும்.
விண்ணரசுக்காகப் பணியாற்றும் புனிதப் பொறுப்பைக் கொண்டிருந்தாலும், திருஅவை தன் அமைப்புகளுக்குள் இருக்கும் மனித இயல்புக்கே உரிய பலவீனங்களையும், இந்த உலகின் நிலையற்ற தன்மையையும் கொண்டிருப்பதைத் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ள அழைக்கப்படுகிறது. ஏனெனில், இந்த நிறுவனங்கள் இவ்வுலகின் அழிந்துபோகும் பிம்பத்தையே தாங்கியுள்ளன (LG, 48). எந்தவொரு திருஅவை நிறுவனத்தையும் ஒருபோதும் இறுதியானதாகவோ அல்லது மாற்ற முடியாததாகவோ கருத முடியாது. மாறாக, அவை வரலாற்றிலும் காலத்திலும் இயங்குவதால், அவை தங்களைத் தாங்களே தொடர்ந்து மனமாற்றத்திற்கும் (conversion), வடிவங்களின் புதுப்பித்தலுக்கும் (renewal), அமைப்புகளின் சீர்திருத்தத்திற்கும் (reform) உட்படுத்திக் கொள்ள அழைக்கப்படுகின்றன. உறவுகளைத் தொடர்ந்து புதிய முறையில் கட்டியெழுப்பும்போதுதான், அவை தங்களின் பணியை உண்மையாக நிறைவேற்ற முடியும்.
இறைவனின் ஆட்சியில் இன்று உழைத்துக் கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களுக்கும், ஏற்கனவே தங்களது மண்ணுலக வாழ்வை முடித்துவிட்டு தூய்மை பெறும் நிலையில் அல்லது பேரின்ப நிலையில் இருப்பவர்களுக்கும் இடையிலான உறவையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில், மக்களினங்களின் ஒளி வலியுறுத்துவது என்னவென்றால், கிறிஸ்தவர்கள் அனைவரும் இணைந்து ஒரே திருஅவையாக உருவெடுக்கின்றனர்; நம்பிக்கையாளர்கள் அனைவரும் கிறிஸ்துவுடன் கொண்டுள்ள ஒன்றிப்பின் அடிப்படையில், அவர்களிடையே ஓர் உறவும் ஆன்மீகச் செல்வங்களைப் பகிர்ந்து கொள்ளும் தன்மையும் நிலவுகிறது. இது மண்ணுலகத் திருஅவைக்கும் விண்ணகத் திருஅவைக்கும் இடையிலான ஒரு சகோதரத்துவ அக்கறையாகும்: இந்த 'புனிதர்களின் உறவு' (Communion of Saints) குறிப்பாகத் திருவழிபாட்டில் (Liturgy) அனுபவிக்கப்படுகிறது (LG, 49–51).
மறைந்தவர்களுக்காகச் செபிப்பதன் வழியாகவும், இயேசுவின் சீடர்களாக ஏற்கனவே வாழ்ந்து மறைந்தவர்களின் காலடிகளைப் பின்பற்றுவதன் வழியாகவும், நாமும் நமது பயணத்தில் ஊக்கம் பெறுகிறோம்; கடவுள் மீதான நமது வழிபாட்டையும் உறுதிப்படுத்துகிறோம். ஒரே தூய ஆவியால் முத்திரையிடப்பட்டு, ஒரே திருவழிபாட்டில் ஒன்றிணைந்து, நம்பிக்கையில் நமக்கு முன் சென்றவர்களோடு சேர்ந்து, நாம் மூவொரு இறைவனைப் போற்றிப் புகழ்ந்து மாட்சிப்படுத்துகிறோம். கிறிஸ்தவ வாழ்வின் மிக முக்கியமான மற்றும் மிகவும் அழகான இந்தப் பரிமாணத்தை நமக்கு நினைவுபடுத்தியதற்காக, வத்திக்கான் சங்கத் தந்தையர்களுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்; மேலும், இதனை நமது சொந்த வாழ்வில் வளர்த்தெடுக்கவும் நாம் முயற்சி செய்கிறோம்.
இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை திருத்தந்தை நிறைவு செய்தார். இறுதியாக இயேசு கற்பித்த இறைவேண்டல் செபத்திற்குப் பிறகு அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது திருத்தூது ஆசீரை வழங்கினார்.