அமைதிக் காயம் | Veritas Tamil

வீட்டில் யாருக்காவது உடல் நலம் சரியில்லையென்றால் உடனே கவலைப்படுவோம், மருத்துவரை பார்க்கச் சொல்வோம், மருந்து வாங்கிச்செல்வோம். ஆனால் மனம் சோர்ந்து போனபோது, உள்ளுக்குள் உடைந்து கொண்டிருக்கும் போது, அதைப் பற்றி நாம் பேசுவதும் கேட்பதும் மிகவும் அரிது. உண்மையில், குடும்பத்தில் மனநலம் என்பது பல நேரங்களில் பேசப்படாத ஒரு உண்மை. தினசரி வாழ்வில் ஏற்படும் அழுத்தம், பணியிடம், குழந்தைகள், பொறுப்புகள், எதிர்பார்ப்புகள்—இவை எல்லாம் அமைதியாக நம்மைத் தள்ளிச் செல்கின்றன. ஆனால் “சரி இல்ல” என்று சொல்ல நம்மில் பலருக்கும் தைரியம் இல்லாததால், அந்த அமைதியான சுமை நாள் நாளாக கனமாகிறது.

ரேவதி என்ற ஒரு வேலைக்குச் செல்லும் அம்மாவின் வாழ்க்கை அதற்கு ஓர் உதாரணம். வீட்டுப்பணி, அலுவலக அழுத்தம், குழந்தைகளின் பொறுப்பு—அவள் ஒரு நிமிஷம் கூட ஓய்வெடுக்கவில்லை. ஒருநாள் அவள் மகன் கேட்டான், “அம்மா, நீங்க சிரிக்குறது குறைஞ்சுருச்சு… ஏதாவது கஷ்டமா?” ரேவதி உடனே, “எதுவும் இல்லைப்பா…” என்று பதிலளித்தாள். ஆனால் உண்மையில் அவள் உள்ளுக்குள் சோர்ந்து கொண்டிருந்தாள், தூக்கமின்மை, வேலைப்பளு, இடையே வரும் கவலைகள்—அவளது மனதில் சுமை பெருகிக் கொண்டே இருந்தது.

ஒரு நாள் அலுவலகத்தில் மயக்கம் ஏற்பட்டது. உடல் நலப் பிரச்சனையென்று நினைத்து மருத்துவரைப் பார்க்க சென்றபோது, அவர் அமைதியாக கேட்டார், “ரேவதி, நீங்க ஓய்வெடுக்குறீங்களா? மன அழுத்தமா இருக்குது போல?” அந்த ஒரு கேள்வி அவளது உள்ளத்தை உடைத்தது. முதல் முறையாக, அவள் உண்மையாக பேசத் தொடங்கினாள். வீடு திரும்பியதும், கணவருக்கும் குழந்தைகளுக்கும் அவள் சொன்னாள்: “எனக்கு சோர்வா இருக்கு. மனசுல ஏதோ சுமை இருக்கு. கொஞ்சம் உதவி வேணும்.” அந்த ஒற்றைக் கூற்று அவர்களின் குடும்ப வாழ்வை மாற்றி அமைத்தது. அவர்கள் வேலைகளைப் பகிர்ந்து கொண்டார்கள், ரேவதிக்கு ஓய்வு நேரம் கொடுத்தார்கள், முக்கியமாக—அவளை அமைதியாகக் கேட்கத் தொடங்கினார்கள். சில நாட்களில் ரேவதியின் உள்ளச் சுமை குறைந்தது. அவள் மீண்டும் சிரிக்கத் தொடங்கினாள்.

குடும்பத்தில் மனநலத்தைப் பேணுவது பெரிய விஷயம் அல்ல. ஒருவருக்கொருவர் கேட்பது, சிறு பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது, “நான் இருக்கேன், கவலைப்படாதீங்க” என்று சொல்லுவது—இவை எல்லாம் மனதுக்கு மருந்து போன்றவை. மனநலத்தைப் பற்றி பேசுவது பலவீனம் அல்ல; அது தைரியம். வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களின் மன அழுத்தத்தை திறந்த மனதுடன் பகிர முடிந்தால், அந்த வீடு வெறும் வீட்டாக இல்லாமல், மனம் ஓய்வெடுக்கும் ஒரு புனித தலமாக மாறிவிடும்.

குடும்பத்தில் மனநலத்தைப் பற்றி பேசத் தொடங்கும் ஒவ்வொரு நாளும்—ஒரு உயிரை காப்பாற்றும் நாள் தான்.

Tamil Survey Popup Image