நூறு மடங்காக

வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும் - மத்தேயு 13:45. உண்மையையும் இறைவனையும், அறிவதற்காக முயற்சிகளை மேற்கொள்ளும் ஒருவர் தான் நல்முத்துக்களை  தேடி அலையும் வணிகர். தேடி அலைந்த அவர் எதிலும் மன நிறைவு அடையாதபடியால் மேலும் மேலும் தேடிக்கொண்டே இருக்கிறார்.

இயேசுவின் வார்த்தை என்னும் முத்தைக் கண்டு பிடித்தார். நிலைவாழ்வைத் தரும் இறையாட்சியைப் பெறுவதே தன் வாழ்வின் நோக்கம் என்பதை அறிந்தார். அத்துடன் அவரது தேடல் முடிவுற்றது. இயேசுவின் வார்த்தைப் படி வாழ நம்மிடமுள்ள தற்பெருமை, பேராசை, தன்னலம், கோபம் போன்ற பாவங்களை அறிந்து,  மனம் மாறி,  இயேசுவின் அன்பை  பெற்று, நிலைவாழ்வுக்கு உரியவராகிறார். 

கலிலேயக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பேதுருவும், யோவானும், யாக்கோபும் அவ்வாறே எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினர். நல் முத்தை பெற்று கொண்டனர். சக்கேயுவும் இயேசுவை கண்டதும் தன்னிடமிருந்த குற்றங்களை விட்டு விட்டு நிறை வாழ்வை பெறுகிறார். மத்தேயு நற்செய்தியில் இயேசு, என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தந்தையையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர். நிலை வாழ்வையும் உரிமைப் பேறாக அடைவர் என்று கூறுகிறார்.

நமக்கு எது உயர்ந்தது, எது நம்மை வாழ வைக்கும், எது நமக்கு உலக இன்பத்தை தரும், எது நமக்கு மனதுக்கு இனியது என நினைக்கிறோமோ அதைவிட்டு (விற்று விட்டு) இயேசுவை, அவரது வார்த்தையை பிடித்து கொள்வோம். நல்ல முத்தாகிய பரலோகத்தை பெற்று கொள்வோம்.

ஜெபம்: ஆண்டவரே எங்களுக்கு பரலோகத்தை அடைய கூடிய வழியை காட்டும். அதற்கு தடையாக இருப்பவற்றை விட்டு உம்மை பற்றி கொள்ள துய ஆவியின் துணை தாரும். ஆமென். #veritastamil #rvatamil #companionpriest