அறனும் அடைக்கலமும் அவரே

"நானோ உமது ஆற்றலை புகழ்ந்து பாடுவேன்; காலையில் உமது பேரன்பைப் பற்றி ஆர்பரித்துப் பாடுவேன்; ஏனெனில், நெருக்கடியான வேளையில் நீர் எனக்கு அறனும் அடைக்கலமுமாய் இருந்தீர்" - திருப்பாடல்கள் 59:16. இன்றைய பொழுது விடியும் என்ற நம்பிக்கையில் தான் நாம் நேற்றைய இரவில் தூக்கத் தொடங்கினோம். சிலருக்கு அந்த நம்பிக்கை பொய்த்துப் போயிருக்கலாம். அனால் நமக்கு அதை நிஜமாகித் தந்த இறைவனை இந்த அதிகாலை வேளையில் நன்றியோடு துதிப்போம். ரம்மியமான இந்த அதிகாலை பொழுதில் பேரரிகத்தின் ஊற்றாம் ஆண்டவரின் ஆற்றலை புகழ்ந்து பாடுவோம். ஏனெனில் அவரே நமக்கு அரண்; அவரே நமது பேரன்பு. துன்பங்களும் துயரங்களும் சூழ்ந்த நெருக்கடியான நேரங்களில் தன தோள்களில் நம்மைச் சுமந்து அடைக்கலம் தந்த தேவன் அவர். இந்த நாளை அவரின் பாதம் முழுவதும் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போமா. 

எங்களுக்கு அறனும் அடைக்கலமுமான அன்பின் நேசரே! உம்மை புகழ்ந்து, ஆராதித்து, மகிமைப்படுத்தி, உமக்கு நன்றி கூறுகின்றோம். தீமை செய்வோரிடமிருந்தும், கொடியவர்களிடமிருந்தும், பகைவர்களிடமிருந்தும், துரோகிகளிடமிருந்தும், ஏளனம் செய்வோரிடமிருந்தும், இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொள்ளை நோயிலிருந்தும் எம்மைக் காத்து வரும் இறைவா, உமது பாதுகாப்பிற்காக நன்றி. எங்கள் கூக்குரலைக் கேட்டு, எங்கள் விண்ணப்பங்களுக்கு செவிசாய்க்கின்றவரே உமக்கு நன்றி. நாங்கள் என்றும் உமது கூடாரத்தில் தங்கியிருந்து, உமது இறக்கைகளில் பாதுகாப்புப் பெற்று உமது உரிமைச் சொத்தான மக்களாக இருக்க என்றும் எங்களை ஆசீர்வதியும். நல்ல ஆலோசனை மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.