மாற்றத்தக் கண்டும் மாறாததே அன்பு! | ஆர்.கே. சாமி | VeritasTamil

24 பிப்ரவரி  2024,                                                                                          

தவக்காலம் முதல் வாரம் - சனி

இணைச்சட்ட நூல் 26: 16-19                                                                            

மத்தேயு 5: 43-48 

முதல் வாசகம்:

இன்றைய முதல் வாசகமானது, இணைச்சட்ட நூலில் இருந்து எடுக்கப்பட்டது.   இது இஸ்ரயேல் மக்களுக்கு மோசே ஆற்றிய உரையின் ஒரு பகுதியாகும். இக்காலக்கட்டத்தில் இஸ்ரயேல் மக்கள் ஏறக்குறைய 40 ஆண்டுகள் பாலைநிலத்தில் பயணித்து, யோர்தான் ஆற்றின் கிழக்குப் பகுதியில் தங்கி இருக்கிறார்கள். அடுத்து அவர்கள் யோர்தான் ஆற்றைக் கடந்து கானானில் கால் வைக்க வேண்டும். இத்தருணத்தில் இந்த உரையை மோசே ஆற்றுகிறார். 

கடவுள் சில விதிகளையும் கட்டளைகளையும் இஸ்ரயேல் மக்கள் பின்பற்றுவதற்கு வழங்கியதை இங்கே மோசே மக்களுக்கு நினைவூட்டுகிறார். அவர்கள் இந்த விதிகளை முழு இருதயத்தோடும் ஆன்மாவோடும் கடைப்பிடித்தால், அவர்கள் கடவுளுடன் ஒரு சிறப்பு உறவு கொண்டு, அவரது மக்களாக வாழ்வார்கள் என்று வலியுறுத்துகிறார்.

அவர்கள் அவருடைய கட்டளைகளை உண்மையாக பின்பற்றினால், அவர்களை மற்ற இனங்களுக்கு  மேலாக உயர்த்தி, அவர்களை புனிதமான மற்றும் புகழ்பெற்ற மக்களாக ஆக்குவதாக கடவுள் உறுதியளிக்கிறார். அடிப்படையில், இது கடவுளுடன் ஓர்  உடன்படிக்கையை கொண்டிருப்பதற்கு இணையாக உள்ளது எனலாம். 

நற்செய்தி :

நிச்சயமாக! இந்த நற்செய்தி பகுதியில், இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு அன்பு மற்றும் இரக்கம் பற்றிய ஆழமான பாடத்தை கற்பிக்கிறார். மக்கள் வழக்கமாக நல்லவர்களை மட்டுமே அன்பு செய்வதும், அவர்களின் நண்பர்களை மட்டுமே அன்பாக நடத்துவதும்  பொதுவான ஒன்று. இயேசு இதற்கு மாறாக,  எதிரிகளாகக் கருதப்படுபவர்களையும்  அன்பு செய்வதில்தான் அன்பின் மேன்மை அடங்கியுள்ளது என்கிறார். 

‘உங்களை அன்பு செய்பவர்களை மட்டுமல்ல, உங்களுக்கு எதிராக இருப்பவர்களையும் அன்பு செய்வதன் மூலம்,   நீங்கள் மிகவும் ஆழமான மற்றும் தன்னலமற்ற அன்பை வெளிப்படுத்துகிறீர்கள்' என்று சீடர்களுக்கு எடுத்துரைக்கிறார்.  

கடவுள் மனிதகுலத்தின் மீது வைத்திருக்கும்  அன்பை பிரதிபலிக்கும் வகையில், இயேசுவின் சீடர்கள் மற்றவர்களிடம் ஆழ்ந்த மற்றும் தன்னலமற்ற அன்புடன் வாழ வேண்டும் என்கிறார்.


சிந்தனைக்கு:

அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே, இறைவன் இருக்கின்றான் என்ற பாடலை  நாம்  அடிக்கடி பாடுவதுண்டு.   ‘கடவுள் அன்பாய் இருக்கிறார். அன்பில் நிலைத்திருகிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு  இணைந்திருக்கிறார்’ (1 யோவான் 4:16) என்றும் நமக்குக் கூறப்பட்டள்ளது.

ஆகவே, கடவுளையும் அன்பையும், அவரோடு கூடிய நமது அன்பு உறவையும் பிரிக்க முடியாது. இது சிலுவையில் இயேசு வெளிப்படுத்திய உடன்படிக்கை அன்பு. இயேசு தான்  தந்தையிடமிருந்து கொணர்ந்த அன்பை இவ்வுலக மானிடரோடு பகிர்ந்தார். ஒடுக்கப்பட்டோர், ஓரங்கட்டப்பட்டோர், விளிம்பிற்குத் தள்ளப்பட்டோர், ஏழைகள் ஆகியோரோடு அன்பின் இமித்தம்   தன்னை மிகவும் ஒன்றித்துக்கொண்டார். ஆம், அவர்களோடு பந்தியமர்ந்தார். இவ்வாறு தமதன்பைப் பகிர்ந்து கொண்டார். 

இங்கே  இயேசு, மற்றொரு கேள்வியை நம்முன் வைக்கிறார். ‘உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்?’ என்று வினவுகிறார். இது இயேசுவின் மற்றுமொரு புரட்சிகரமான கேள்வி.

அவர் தன்னை அன்பு செய்பவர்களோடு மட்டுமல்ல, தன்னை வெறுப்பவர்களையும் அன்பு செய்தார் என்பதை யாரும் மறுக்க இயலாது. கல்வாரியில், “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில், தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” (லூக்கா 23:34) என்று தன்னைத் துன்புறுத்திய எதிரிகளுக்காக வேண்டினார்.

விலிலியம் ஷெக்பியர் அன்பு பற்றி கருத்துரைக்கையில், ‘Love is not love Which alters when it alteration finds’ என்றார். ‘மாற்றத்தைக் கண்டு மாறுவது உண்மை அன்பாகாது.  உற்ற  நண்பராக  இருந்த ஒருவர், சந்தர்ப்பச் சூழலால் எதிரியாக மாறலாம்.  இதனால்,  அவர் மீது காட்டிய அன்பு மாறக்கூடாது. அவருக்கு  உதவ வேண்டிய நிலை ஏற்பட்டால், உடனடியாக உதவ வேண்டும். அவருக்குக் கை கொடுக்க வேண்டும்.

இறுதியாக, உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள் என்கிறார். நம்மால் நிறைவுள்ளவர்களாக இருக்க முடியுமா என்ற கேள்வி எழக்கூடும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. நம் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடவுளை அண்டிவரும்போது அனைத்தும் சாத்தியமே. சாத்தியமற்ற ஒன்றை கடவுள் ஒருபோதும் வற்புறுத்தமாட்டார். முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடவுளை அண்டி வர ஆன்மீகப் பயிற்சி தேவை. இப்பயிற்சிக்குரிய காலம் இத்தவக்காலம். முயற்சி செய்வோம். முயல்வோரை கடவுள் கைவிடுவதில்லை. 


இறைவேண்டல்:

‘உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்’ என்றுரைத்த ஆண்டவரே, உமது இந்த வேண்டுகோளை நான் ஒவ்வொரு நாளும் நிறைவேற்ற மனவுறுதி தாரும். ஆமென்


 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452