நலமாய்ப் புவியில் உயிர்கள் வாழ

உலக சுற்றுச்சூழல் தினம்
நிலம், நீர், காற்று இவை மூன்றும்,
இயற்கையில் அமைந்த வளங்களாம்
நலமாய்ப் புவியில் உயிர்கள் வாழ
இயற்கை தந்த வரங்களாம்.
காற்றில் மாசு தவிர்த்திடுவோம்.
கரியமில வாயு குறைத்திடுவோம்.
நிலத்தையும் நீரையும் மாசுபடுத்தும்
ஆலைக்கழிவுகள் தடுத்திடுவோம்.
நிலத்தடி நீர் வளம் பெருக்கிடுவோம்.
பாசன நீரில் மாசு கலந்தால்
பயிர்வளம் தன்னை பாதிக்கும்.
பயிர்வளம் பெரிதும் பாதித்தால்
பஞ்சம் நாட்டில் பெருகிவிடும்.
இதைத்தான் ஆன்றோர் சொல்லிவைத்தார்
சுத்தம் சோறு போடுமென்று.
விஞ்ஞானத்தின் விளைவு என்றுரைத்து
அஞ்ஞானத்தை வெளிப்படுத்தாது
தவிர்த்திடும் வழிகளைக் கடைபிடிப்போம்.
தவித்திடும் உயிர்களைக் காத்திடுவோம்.
வீடுகளில் நாம் மரம் வளர்ப்போம்.
காடுகளை நாம் காத்திடுவோம்.
ஆறு , ஏரி , நீர் நிலைகளில்
ஆக்கிரமிப்பைத் தடுத்திடுவோம்.
சுற்றுப்புறத்தில் கழிவுகளின்றி
சுத்தம் பேணும் செயல்பாட்டால்
நாட்டின் சுத்தம் மேம்படுமே.
சுகாதாரமும் பெருகிடுமே
பொருளாதாரமும் சிறந்திடுமே.
இயற்கை வளங்களைக் காப்பதனால்
இயற்கை நம்மைக் காத்திடுமே.
இயற்கை அளித்த வளங்களெல்லாம்
எல்லா உயிர்க்கும் பொது உடைமை
சுற்றுப் புறச் சூழலைக் காத்து
இனிதே வாழ்வது நம் கடமை.
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
Daily Program
