ஆசியத் திருஅவையின் டிஜிட்டல் மறைப்பணியை வலுப்படுத்தும் FABC-OSC | FABC | Veritas Tamil

ஜகார்த்தா, ஜூலை 21 – ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) சமூகத் தகவல் தொடர்புத் துறை (FABC-OSC), டிஜிட்டல் மறைப்பணி, ஒன்றிணைந்த தகவல் தொடர்பு மற்றும் ஆசியத் திருஅவைகளுக்கிடையேயான ஒத்துழைப்பில் தனது பங்களிப்பு தொடர்ந்து வளர்ந்து வருவதாக, ஜூலை 21 அன்று நடைபெற்ற 12ஆம் FABC நிறைவிறுதிப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

திருஅவையின் நற்செய்தி அறிவித்தல், உரையாடல் மற்றும் ஒற்றுமை ஆகிய பணிகளில் தகவல் தொடர்பு இன்று இன்றியமையாத அங்கமாக மாறியிருப்பதை அந்த அறிக்கை எடுத்துக்காட்டியது.

2025 மார்ச் மாதத்தில் ஆயர் மார்சலினோ ஆண்டோனியோ மராலிட் ஜூனியர் தலைவர் மற்றும் அருள்பணி ஜான் மி ஷென் நிர்வாகச் செயலாளராக நியமிக்கப்பட்டது, FABC-OSC அலுவலகத்தின் புதிய கட்டத்தின் தொடக்கமாக அமைந்தது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் குவிசோன் நகரில் உள்ள ரேடியோ வெரித்தாஸ் ஆசியா (RVA) வளாகத்தில் செயல்படும் இந்த அலுவலகம், ஆசியத் திருஅவைகளுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, தகவல் தொடர்பின் வழியாக ஒன்றிப்பை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

ஆசியாவின் முன்னணி கத்தோலிக்க பல்லூடக வலையமைப்பான ரேடியோ வெரித்தாஸ் ஆசியா, 2025 ஆகஸ்ட் மாதத்தில் பொதுமேலாளராக பொறுப்பேற்ற அருள்பணி பெல்மார் ஃபியல், SVD அவர்களின் தலைமையில், மொழிப் பிரிவுகள் மற்றும் மாநிலக் கூட்டாளிகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தியது.

மியான்மர் மொழிப் பிரிவுடன் வழக்கமான ஒருங்கிணைப்பு மீண்டும் தொடங்கப்பட்டதையும், தைவானில் செயல்படும் மாண்டரின் தயாரிப்பு மையத்துடன் ஒத்துழைப்பு புதுப்பிக்கப்பட்டதையும் அறிக்கை சிறப்பித்துக் கூறியது.

RVA-வின் பன்மொழித் தளங்கள் வழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்  ஆசியப் பயணம், அவரது மறைவு, கர்தினால்மார் பேரவைக்கான (Conclave) செபங்கள் மற்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் தேர்வு போன்ற உலகத் திருஅவையின் முக்கிய நிகழ்வுகளை ஆசிய கத்தோலிக்கர்கள் நெருக்கமாகப் பின்தொடர முடிந்தது.

புவியியல் மற்றும் மொழித் தடைகளைத் தாண்டி, கோடிக்கணக்கான கத்தோலிக்கர்கள் இந்த நிகழ்வுகளில் ஆன்மீக ரீதியாக இணைந்திருக்க இந்த ஊடகச் சேவை உதவியதாக அறிக்கை குறிப்பிட்டது.

‘இறைவா உமக்கே புகழ்’  சுற்றுமடலின் 10ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, FABC வெளியிட்ட மேய்ப்புப்பணிக் கடிதத்தைத் தொடர்ந்து, FABC-OSC ஆசியா முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுத்தது.

இதன் ஒரு பகுதியாக இணையவழி கருத்தரங்குகள், குறும்படப் போட்டி, உள்ளூர் திருஅவைகளின் சுற்றுச்சூழல் அனுபவப் பகிர்வுகள் மற்றும் "The Voice for Our Common Home: Laudato Si' in Asia" என்ற வெளியீடு ஆகியவை இடம்பெற்றன. படைப்பைப் பாதுகாக்கும் பொறுப்பை அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க கத்தோலிக்க மக்களை இந்த இயக்கம் ஊக்குவித்தது.

2025 மார்ச் மாதம் மியான்மரில் ஏற்பட்ட பேரழிவூட்டிய நிலநடுக்கத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை உலகிற்கு எடுத்துரைப்பதிலும், தகவல் பரிமாற்றத்தை ஒருங்கிணைப்பதிலும், மனிதாபிமான உதவிகளுக்கு ஆதரவளிப்பதிலும் FABC-OSC முக்கிய பங்காற்றியது.

மேலும், ஆசிய மறைப்பணிக் மாநாடு மற்றும் மாபெரும் நம்பிக்கை திருப்பயணம் போன்ற முக்கிய திருஅவை நிகழ்வுகளின் ஊடக ஒருங்கிணைப்புப் பணிகளையும் மேற்கொண்டது.

2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள், ரேடியோ வெரித்தாஸ் ஆசியாவின் டிஜிட்டல் தளங்களைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ  40 விழுக்காடு அதிகரித்து 12.6 இலட்சத்தை எட்டியது. மேலும், RVA-வின் வியட்நாம் மொழிப் பிரிவு, தனது இணையவழி மறைப்பணிக்காக YouTube Silver Play Button விருதையும் பெற்றது.

2025 டிசம்பரில், ஹாங்காங்கில் நடைபெற்ற சந்திப்பில், 40-க்கும் மேற்பட்ட ஆயர்களும் தகவல் தொடர்புத் தலைவர்களும், திருப்பீடத்தின் தகவல் தொடர்பு துறையின் பிரதிநிதிகளுடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு திருஅவையின் பணியில் உருவாக்கும் வாய்ப்புகள் மற்றும் அறநெறிசார் சவால்கள் குறித்து கலந்துரையாடினர்.

இந்தோனேசிய ஆயர் பேரவையின் தகவல் தொடர்பு அலுவலகத்துடன் இணைந்து, 12ஆம் FABC நிறைவிறுதிப் பேரவையின் செய்திகளை ஆசியா மற்றும் உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் ஊடக ஒருங்கிணைப்புப் பணியையும் FABC-OSC மேற்கொண்டு வருகிறது.

எதிர்காலத் திட்டங்களை முன்னிட்டு, மணிலாவில் நடைபெறவுள்ள ஆசிய கத்தோலிக்க டிஜிட்டல் இன்ஃப்ளூயன்சர்கள் மாநாடு, "Magnifica Humanitas மற்றும் ஆசியாவில் ஒன்றிணைந்த வழியிலான நற்செய்தி அறிவித்தல்" என்ற கருப்பொருளில் மக்காவுவில் நடைபெறவுள்ள FABC-OSC ஆயர்கள் கூட்டம், மேலும் 2027ஆம் ஆண்டு கொரியாவில் நடைபெறவுள்ள உலக இளைஞர் தின நிகழ்வுக்கான தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல முக்கிய முயற்சிகளை FABC-OSC அலுவலகம் அறிவித்தது.

"ஆசியாவில் ஒன்றிணைந்த மனமாற்றமும் பாலங்களைக் கட்டும் மறைப்பணியும்" என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்தப் பேரவையின் பின்னணியில், தகவல் தொடர்பு என்பது திருஅவையின் ஒன்றிணைந்த வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக உருவெடுத்து, ஆசியாவின் உள்ளூர் திருஅவைகளுக்கிடையே ஒன்றிப்பை வலுப்படுத்துவதோடு, டிஜிட்டல் ஊடகங்கள் வழியாக புதிய தலைமுறையினருக்கு நற்செய்தியை எடுத்துச் செல்கிறது என்பதை இவ்வறிக்கை வலியுறுத்தியுள்ளது.

Tamil Survey Popup Image