உண்மையான சாட்சியமே முக்கியம் | Veritas Tamil
முதல் ஆசிய டிஜிட்டல் மறைப்பணியாளர் பேரவைக்கு முன்னதாக, உண்மையான சாட்சியமே முக்கியம் என RVA நிகழ்ச்சிப் பணிப்பாளர் வலியுறுத்தல்
RVA News | செப்டம்பர் 05, 2026
ஆசியத் திருஅவை அதிகமான டிஜிட்டல் உள்ளடக்கங்களை உருவாக்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், அர்த்தம், உறவு மற்றும் நம்பிக்கையைத் தேடும் மக்களுக்கு உண்மையான இறைநம்பிக்கை கொண்ட ஒரு இருப்பாக மாற வேண்டும் என்று FABC சமூகத் தொடர்பாடல் அலுவலகத்தின் (OSC) நிர்வாகச் செயலரும், Radio Veritas Asia (RVA) நிகழ்ச்சிப் பணிப்பாளருமான அருட்தந்தை ஜான் மி ஷென் தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான முதல் ஆசிய கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர் பேரவைக்கு முன்னதாகப் பேசிய அவர், பயனுள்ள டிஜிட்டல் நற்செய்திப் பணியானது, இணையத்தில் எத்தகைய செய்தியை வெளியிடுவது என்பதைத் தீர்மானிப்பதில் மட்டும் தொடங்கக் கூடாது என்றும், மாறாக மக்களின் அனுபவங்களைக் கேட்பதிலும், அவர்களுடன் பயணிப்பதிலும் தொடங்க வேண்டும் என்றும் கூறினார்.
“நாம் ‘எதைத் தொடர்புகொள்வது?’ என்று கேட்பதற்கு முன், ‘மக்கள் எதை அனுபவிக்கிறார்கள்? அவர்கள் எதைத் தேடுகிறார்கள்?’ என்று கேட்க வேண்டும்.”
“செல்வாக்காளர்களிடமிருந்து சாட்சிகளாக: ஆசியாவில் டிஜிட்டல் மறைப்பணிக்கான திருஅவை ஒன்றிணைந்த பயணம்” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்தப் பேரவை, செப்டம்பர் 10 முதல் 13 வரை பிலிப்பைன்ஸில் உள்ள Radio Veritas Asia மையத்தில் நடைபெறுகிறது. இதில் ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கத்தோலிக்க டிஜிட்டல் தொடர்பாளர்கள் மற்றும் செல்வாக்காளர்கள் பங்கேற்கின்றனர்.
டிஜிட்டல் மறைப்பணியின் மூன்று முக்கிய இயக்கங்கள்
டிஜிட்டல் மறைப்பணிக்கு மூன்று முக்கியமான செயல்பாடுகள் அவசியம் என அருட்தந்தை மி ஷென் குறிப்பிட்டார்:
1. கேட்பது
2. உடன் பயணிப்பது
3. சாட்சியமளிப்பது
ஒரு காணொளி, பாட்காஸ்ட், விவிலியச் சிந்தனை அல்லது சமூக ஊடகப் பதிவு ஆகியவை ஒரு நபரை மற்றொருவருடன் சந்திப்பதற்கான வாய்ப்பை உருவாக்கலாம். ஆனால் அதன் நோக்கம் அதிகமான உள்ளடக்கங்களை உருவாக்குவது, பார்வைகளைப் பெறுவது அல்லது ஈடுபாட்டை அதிகரிப்பது மட்டுமாக இருக்கக் கூடாது. மாறாக, உறவுகளை உருவாக்குவதே நோக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
“ஒவ்வொரு திரைக்குப் பின்னாலும் அர்த்தத்தைத் தேடும் ஒரு நபர் இருக்கிறார். உறவைத் தேடும் ஒருவர் இருக்கிறார். சில நேரங்களில் தங்களுடைய பேச்சைக் கேட்க யாராவது ஒருவர் வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒருவரும் இருக்கிறார்.”
டிஜிட்டல் தளங்கள் உருவாக்கும் புதிய வாய்ப்புகள்
சீன மொழி பேசும் சமூகங்களுக்காக RVA-வின் Mandarin Service மற்றும் விவிலியப் படிப்பு முயற்சிகளை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட அருட்தந்தை மி ஷென், டிஜிட்டல் தளங்கள் புவியியல் மற்றும் சமூகத் தடைகளைத் தாண்டி மக்களை இணைக்க உதவுகின்றன என்றார்.
திருஅவைச் செயல்பாடுகளில் நேரடியாகப் பங்கேற்கவோ, குருக்களைச் சந்திக்கவோ அல்லது நேரடியாக விவிலியப் படிப்பில் கலந்துகொள்ளவோ வாய்ப்பு குறைவாக உள்ளவர்களுக்கும் இத்தகைய தளங்கள் உதவுகின்றன.
இணையவழி விவிலியப் படிப்பு என்பது வெறுமனே விவிலியத் தகவல்களைப் பரப்பும் ஒரு செயலாக இல்லாமல், மக்கள் ஒன்றாக இறைவார்த்தையை வாசித்து, தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து, கேள்விகளைக் கேட்டு, ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும் ஒரு உறவுச் சமூகமாக மாற முடியும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, டிஜிட்டல் மறைப்பணி நேரடி திருப்பணிக்கு மாற்றாக இருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
“டிஜிட்டல் மறைப்பணி, பாரம்பரிய திருப்பணிக்கு மாற்றாக அல்ல; அதற்கு துணையாகவும், இரண்டையும் இணைக்கும் ஒரு பாலமாகவும் இருக்க வேண்டும்.”
மொழிபெயர்ப்பைத் தாண்டிய பண்பாட்டுத் தழுவல்
ஆசியாவின் பல்வேறு கலாச்சாரங்களையும் சமயங்களையும் கருத்தில் கொண்டு டிஜிட்டல் மறைப்பணி மிகவும் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பல மொழிகளையும் தனித்துவமான பண்பாட்டு சூழல்களையும் கொண்ட ஆசியாவை, ஒரே செய்தியை வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பதன் மூலம் மட்டுமே சென்றடைய முடியாது.
“மொழிபெயர்ப்பு முக்கியமானது. ஆனால் பண்பாட்டுத் தழுவல் என்பது மொழிபெயர்ப்பைக் காட்டிலும் ஆழமானது.”
ஒன்றிப்பு என்பது ஒரே மாதிரியாக இருப்பதைக் குறிக்காது. மாறாக, வெவ்வேறு சமூகங்களின் குரல்களைக் கேட்டு, அவர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வதை அது உள்ளடக்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
RVA-வின் பல்மொழிச் சேவைகள் மூலம் ஆசியாவின் பல்வேறு திருச்சபைகளின் குரல்களையும் அனுபவங்களையும் கத்தோலிக்கர்கள் அறிந்துகொள்ள முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
செல்வாக்காளர்களாக அல்ல, சாட்சிகளாக...
பேரவையின் கருப்பொருளை மையமாகக் கொண்டு, “செல்வாக்கு” என்பதன் உண்மையான பொருளை கத்தோலிக்க டிஜிட்டல் தொடர்பாளர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அருட்தந்தை மி ஷென் அழைப்பு விடுத்தார்.
“ஒரு செல்வாக்காளர் பொதுவாக, ‘என்னை எத்தனை பேர் பின்தொடர்கிறார்கள்?’ என்று கேட்பார். ஆனால் ஒரு சாட்சி, ‘நான் யாருக்குச் சேவை செய்கிறேன்? எதற்குச் சாட்சியமளிக்கிறேன்?’ என்று கேட்பார்.”
இணையத்தில் ஒருவரின் நம்பகத்தன்மை, அவர் வெளியிடும் செய்தியைத் தாண்டி, அந்தச் செய்திக்குப் பின்னால் இருக்கும் அவரது வாழ்க்கையைப் பொறுத்தே அமைகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
“நமது டிஜிட்டல் இருப்பு அழகாக இருந்தாலும், நமது வாழ்க்கை நற்செய்தியைப் பிரதிபலிக்கவில்லை என்றால், நமது செய்தி இறுதியில் அதன் நம்பகத்தன்மையை இழந்துவிடும்.”
“கிறிஸ்துவுக்காகப் பிரபலமடைய நாம் முயற்சி செய்யக் கூடாது; நமது வாழ்க்கையின் மூலம் கிறிஸ்து அறியப்படுவதற்காக முயற்சி செய்ய வேண்டும்.”
தளங்கள் மாறலாம்; பணி மாறாது
ஆசியாவின் திருஅவைகளை ஒன்றிணைப்பதிலும், உள்ளூர் சமூகங்களின் குரல்களை பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதிலும் FABC-OSC மற்றும் RVA முக்கியப் பங்காற்றுகின்றன என்று அருட்தந்தை மி ஷென் குறிப்பிட்டார்.
“தளங்கள் வந்து போகலாம். ஆனால் நமது பணி ஒன்றே: மக்களை கிறிஸ்துவுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதும், ஒன்றிப்பை உருவாக்குவதும் ஆகும்.”
2026 ஆசிய கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர் பேரவை, டிஜிட்டல் தளங்களை ஒன்றிப்புப் பயணம், சந்திப்பு மற்றும் நற்செய்திப் பணிக்கான இடங்களாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதை ஆராயும்.
குறிப்பாக, பின்தொடர்பவர்களைத் தேடுவதிலிருந்து உறவுகளை உருவாக்குவதற்கும், உள்ளடக்கங்களை உருவாக்குவதிலிருந்து உண்மையான சாட்சிகளாக மாறுவதற்கும் டிஜிட்டல் மறைப்பணியின் கவனத்தை மாற்றுவது குறித்து இந்தப் பேரவை முக்கியத்துவம் அளிக்கும்.
