“எனது காரின் டயர்களை மாற்ற உங்கள் அனுமதி இருக்கிறதா?” – திருஅவையில் ஒன்றிணைந்த பயணத்தின் பாடம் | Veritas Tamil

எளிமையாகத் தோன்றிய இந்தக் கேள்வி, அருள்பணி கிளாரன்ஸ் தேவதாஸ் அவர்களுக்கு, ஒன்றிணைந்த பயணம் (Synodality) குறித்த ஒரு நடைமுறைப் பாடமாக அமைந்தது. பொதுநிலையினர் வெறுமனே முடிவுகளைப் பெறுபவர்களாக இல்லாமல், பங்கின் வாழ்விலும் பணியிலும் உண்மையான பொறுப்பை ஏற்றுக்கொள்ள திருஅவை எவ்வாறு உதவ முடியும் என்பதை விளக்குவதற்கு அவர் இந்த அனுபவத்தை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தினார்.

செப்டம்பர் 2ஆம் தேதி, பாங்காக்கில் உள்ள பான் பூ வான் தியான இல்லத்தில் நடைபெற்ற தேசிய இணைநடை அணிகளின் மூன்று நாள் சந்திப்பின் இரண்டாம் நாள் நிகழ்வில், இரண்டாவது அமர்வின்போது அருள்பணி கிளாரன்ஸ் தேவதாஸ் இந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.ஒன்றிணைந்த பயணத்  தலைமைத்துவத்தை வலுப்படுத்துதல்: ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் மேய்ப்புப்பணி மன்றங்களை ஈடுபடுத்துதல் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த அமர்வை, அருள்பணி தேவதாஸ் மற்றும் ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) துணைத் தலைவரான கர்தினால் பாப்லோ விர்ஜிலியோ டேவிட் ஆகியோர் வழிநடத்தினர்.

ஒன்றிணைந்த பயண செயல்முறையில் ஆயர்களை ஈடுபடுத்துவது குறித்து கர்தினால் டேவிட் கவனம் செலுத்திய நிலையில், அருள்பணி தேவதாஸ், அருள்பணியாளர்களையும் மேய்ப்புப்பணி மன்றங்களையும் இந்தச் செயல்முறையில் ஈடுபடுத்துவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

உரோமையில் நடைபெற்ற உலக ஆயர் மாமன்றத்திற்காகத் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளில் இருந்து தெளிவாகத் தெரியவந்த முக்கிய அம்சங்களில் ஒன்று, ஒன்றிணைந்த பயணத்திற்கு அதிக எதிர்ப்பு அருள்பணியாளர்களிடமிருந்தே வெளிப்பட்டது என்பதாகும் என்று அவர் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த பயணம் இன்னும் தேவையா என்று சில அருள்பணியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மற்றவர்கள், இது கூடுதல் கூட்டங்கள், கலந்தாலோசனைகள் மற்றும் செயல்பாடுகளை உள்ளடக்கிய மற்றுமொரு திருஅவைத் திட்டம் என்று கருதுகின்றனர்.

அருள்பணியாளர்கள் ஏற்கனவே திருப்பலி மற்றும் திருவருட்சாதனங்களை நிறைவேற்றுதல், மருத்துவமனைகள் மற்றும் இல்லங்களுக்குச் சென்று சந்தித்தல், பங்கு மக்களுக்கு உடனிருந்து வழிகாட்டுதல் எனப் பல்வேறு மேய்ப்புப்பணிப் பொறுப்புகளைச் சுமந்து வருவதால், இந்த எதிர்ப்பு புரிந்துகொள்ளத்தக்கது என்று அருள்பணி தேவதாஸ் கூறினார்.

இதற்கான தீர்வு, ஒன்றிணைந்த பயணம் என்பது அருள்பணியாளர்களின் பணிச்சுமையுடன் சேர்க்கப்படும் மற்றொரு திட்டம் அல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த பயணம் என்பது நிர்வாகத் திட்டம் அல்ல என்று கூறிய அவர், புதிய செயல்பாடுகளை உருவாக்குவதற்குப் பதிலாக, அருள்பணியாளர்கள் ஏற்கனவே செய்து வரும் பணிகளில் ஒன்றிணைந்த பயண ஆன்மீகத்தை உள்ளடக்க முடியும் என்று விளக்கினார். எனவே, மாற்றம் என்பது திருஅவை என்ன செய்கிறது என்பதில் மட்டுமல்ல; அதை எவ்வாறு செய்கிறது என்பதிலும் உள்ளது.

திருப்பலி நிறைவேற்றும் முறை, இல்லங்களுக்குச் சென்று சந்திக்கும் முறை, அருள்பணியாளர் மன்றக் கூட்டங்களை நடத்தும் முறை, அடிப்படை திருஅவை சமூகங்களுடன் இணைந்து செயல்படும் முறை போன்ற எளிய நடைமுறைகள்கூட மேய்ப்புப்பணியை மேலும் ஒன்றிணைந்த பயணம் கொண்டதாக மாற்ற முடியும் என்று அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை திருப்பலி முடிந்ததும், ஆலயத்தின் நுழைவாயிலில் நின்று மக்களை வரவேற்பதைத் தனது வழக்கமாகக் கொண்டிருப்பதாக அருள்பணி தேவதாஸ் தெரிவித்தார்.

ஒரு சில நொடிகள் மக்களைப் பார்த்து, அவர்களை வரவேற்று, நன்றி தெரிவிப்பதுகூட, “தாங்கள் பார்க்கப்படுகிறோம், தங்கள் குரல் கேட்கப்படுகிறது” என்ற உணர்வை பங்கு மக்களிடம் ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

இத்தகைய சாதாரண சந்திப்புகள், நிர்வாகத்தை மட்டுமே மையமாகக் கொண்ட அணுகுமுறைக்குப் பதிலாக, செவிமடுத்தல் மற்றும் உடனிருத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட திருஅவைப் பண்பாட்டை உருவாக்க உதவும்.

மேய்ப்புப்பணி மன்றங்களின் பங்கு

தொடர்ந்து மேய்ப்புப்பணி மன்றங்கள் குறித்து பேசிய அருள்பணி தேவதாஸ், ஆசியாவில் உள்ள பல மறைமாவட்டங்களில் ஏற்கனவே ஒன்றிணைந்த பயண பங்கேற்புக்கு ஆதரவளிக்கக்கூடிய அமைப்புகள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டினார்.

பங்குத்தள மேய்ப்புப்பணி மன்றங்களும், பொருளாதார மன்றங்களும் இருப்பது மட்டுமே ஒரு பங்கு இணைநடைத்தன்மையுடன் செயல்படுகிறது என்பதற்கு உத்தரவாதமல்ல. அவற்றுக்கு உண்மையான பொறுப்பு வழங்கப்படுகிறதா, மேலும் திருஅவையின் வாழ்வில் தங்களுக்கும் பொறுப்பு உள்ளது என்பதை பங்கு மக்கள் உணரச் செய்யப்படுகிறார்களா என்பதே முக்கியம் என்று அவர் கூறினார்.

ஒரு சிறிய பங்கில் பணியாற்றியபோது, அந்தப் பங்கின் வாராந்திர ஞாயிறு காணிக்கை 20 அமெரிக்க டாலருக்கும் குறைவாக இருந்ததை அருள்பணி தேவதாஸ் நினைவுகூர்ந்தார்.

பங்கில் அதிகமான பொருளாதார வளங்கள் இருந்ததால் அல்ல, மாறாக பங்கின் வளங்கள் தங்களுடைய பொறுப்பு என்பதை பங்கு மக்கள் உணர வேண்டும் என்பதற்காக அவர் ஒரு பொருளாதார மன்றத்தை உருவாக்கினார்.

இந்தப் பாடம், தனது காரின் டயர்களை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டபோது மேலும் தெளிவானது. பங்கைச் சென்றடைய ஒவ்வொரு வாரமும் சுமார் 100 கிலோமீட்டர் பயணம் செய்ததால், அவரது காரின் டயர்கள் தேய்ந்திருந்தன. அப்போது அவர் பொருளாதார மன்ற உறுப்பினர்களிடம், எனது காரின் டயர்களை மாற்ற உங்கள் அனுமதி இருக்கிறதா?” என்று கேட்டார். இதனால் ஆச்சரியமடைந்த மன்ற உறுப்பினர்கள், இத்தகைய அடிப்படைத் தேவைக்காக பங்கின் நிதியைப் பயன்படுத்த அவர்களின் அனுமதியை அவர் கேட்கத் தேவையில்லை என்று தெரிவித்தனர்.

ஆனால், இந்தப் பதில் மன்ற உறுப்பினர்கள் தங்களுடைய பொறுப்பை உணரத் தொடங்கியிருப்பதைக் காட்டுகிறது என்று அருள்பணி தேவதாஸ் கூறினார். நிதி தொடர்பான முடிவுகளில் அவர்களைத் திட்டமிட்டு ஈடுபடுத்தியதன் நோக்கம், அருள்பணியாளர் வழங்கும் பணிகளைச் செய்வதற்காக மட்டுமே தாங்கள் இருப்பவர்கள் என்ற எண்ணத்திலிருந்து அவர்களை விடுவிப்பதாகும். அவர்கள் பங்கின் வாழ்வில் பொறுப்புள்ள பங்காளிகள் என்பதை உணரச் செய்வதே அதன் நோக்கம் என்று அவர் விளக்கினார்.

மேய்ப்புப்பணி மன்றங்களும் இதே கொள்கையின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார். திருஅவை அமைப்புகள் பல நேரங்களில் செயல்பாடுகளை நிறைவேற்றுதல், இலக்குகளை அடைதல் மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. ஆனால், உண்மையான ஒன்றிணைந்த பயண மேய்ப்புப்பணி மன்றம், தங்களுடைய பணிகள் பங்கின் புதுப்பித்தலுக்கு எவ்வாறு பங்களிக்கின்றன? என்பதையே கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

முடிவெடுப்பதில் அனைவரின் பங்கேற்பு

ஒன்றிணைந்த பயணம் என்பது ஆயர்களும் அருள்பணியாளர்களும் தங்களுடைய முடிவெடுக்கும் பொறுப்பை விட்டுவிட வேண்டும் என்பதல்ல என்றும் அருள்பணி தேவதாஸ் தெளிவுபடுத்தினார்.

இறுதியில் யாரோ ஒருவர் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் முக்கியமான கேள்வி, அந்த முடிவு எவ்வாறு எட்டப்படுகிறது என்பதுதான் என்று அவர் கூறினார். மக்களின் கருத்துகள் செவிமடுக்கப்பட்டனவா? பல்வேறு அனுபவங்கள் கருத்தில் கொள்ளப்பட்டனவா? திருஅவை உறுப்பினர்களுக்கு இறைவேண்டலுடனும் பகுத்தறிதலுடனும் முடிவெடுக்கும் செயல்முறையில் அர்த்தமுள்ள பங்கேற்பு வழங்கப்பட்டதா? என்பவையே முக்கியம் என்று அவர் விளக்கினார்.

திருஅவைச் சட்டத்தில் மாற்றங்கள் அல்லது பிற கட்டமைப்பு சீர்திருத்தங்கள் வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் எச்சரித்தார்.

திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரின் மாண்பையும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதன் மூலம், ஒன்றிணைந்த பயண உணர்வை இப்போதே வாழ்வில் நடைமுறைப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார்.

அருள்பணியாளர்களைப் பொறுத்தவரை, ஒன்றிணைந்த பயணத்தன்மையை கூடுதல் சுமையாகப் பார்க்காமல், தங்களுடைய ஏற்கனவே உள்ள மேய்ப்புப்பணியை மேலும் பயனுள்ளதாக மாற்றும் வழியாகக் கருத வேண்டும்.

அதேபோல், மேய்ப்புப்பணி மன்றங்கள் வெறுமனே ஆலோசனை வழங்குவதையும் பணிகளை நிறைவேற்றுவதையும் தாண்டி, உண்மையான பங்கேற்பு, பொறுப்புணர்வு மற்றும் பகிரப்பட்ட பொறுப்பு ஆகியவற்றை வளர்க்க வேண்டும்.

ஒவ்வொரு நாட்டிலும் ஆயர்கள், அருள்பணியாளர்கள் அல்லது மேய்ப்புப்பணி மன்றங்கள் ஆகியவற்றில் எந்தப் பகுதி உடனடியாக அதிக கவனம் தேவைப்படுகிறது என்பதை தேசிய ஒன்றிணைந்த பயண அணிகள் கண்டறிய வேண்டும் என்று அருள்பணி தேவதாஸ் கேட்டுக்கொண்டார்.

அடுத்த ஆறு மாதங்களுக்குள் செயல்படுத்தக்கூடிய ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையைத் தேர்ந்தெடுக்குமாறும் அவர் அழைப்பு விடுத்தார். அது நடைமுறைக்கு ஏற்றதாகவும், செயல்படுத்தக்கூடியதாகவும், தொடர்ந்து நிலைத்திருக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆசியத் திருஅவையின் முன்னிலையில் உள்ள பணியானது, மேலும் பல கட்டமைப்புகளையும் திட்டங்களையும் உருவாக்குவது மட்டுமல்ல. அருள்பணியாளர்களும் பொதுநிலையினரும் இணைந்து, திருஅவையின் வாழ்வுக்கும் அதன் பணிக்கும் பொறுப்பானவர்கள் என்ற உணர்வை வளர்க்கும் பண்பாட்டை உருவாக்குவதே உண்மையான சவால் என்று அருள்பணி தேவதாஸ் தெரிவித்துள்ளார்.

Tamil Survey Popup Image