நொருங்கிச் சென்றால், நெருங்கி வருவார்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

2 மார்ச்  2024                                                                                          

தவக்காலம் 2ஆம் வாரம் - சனி

மீக்கா 7: 14-15, 18-20                                                                      

லூக்கா  15: 1-3, 11-32

முதல் வாசகம்:

கடவுளின் இரக்கமும் மன்னிக்கும் குணமும் இன்றைய வாசகங்களின் மையக் கருத்தாக உள்ளது.  முதல் வாசகம் இறைவாக்கினர் மீக்காவின்   இறை வேண்டலாக அமைகிறது. இதில் கடவுளை ஒரு மேய்ப்பபராகவும், மக்களைக் கவனித்து வழிநடத்துபவராகவும் மீக்கா வெளிப்படுத்துகிறார். மக்களை அவரது மந்தையாகக் காட்டுகிறார்.   "உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய" என்பது கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரயேலரைக் குறிக்கும் சொற்றொடராகும்.  

பாபிலோனியரின் நாடுகடத்தலின் போது, அனைத்து யூதர்களும் நாடுகடத்தப்படவில்லை.  சிலர் விடுபட்டனர். மீக்கா இறைவாக்கினர்,  யூதர்களில்   எஞ்சியிருக்கும் இவர்களுக்காக மன்றாடுகிறார்.   

கடவுள் மன்னிக்கத் தயாராக இருப்பது மட்டுமல்லாமல்,  மன்னித்தவுடன், அவர்  பாவங்களை முழுவதுமாக மறந்துவிடுகிறார் என்றும் அவற்றை கடலின் ஆழத்தில் எறிந்து விடுகிறார் என்றும் மீக்கா  எடுத்துரைக்கிறார். ஆகவே, புதியன தோன்றும்போது பழைய மீண்டும் கொண்டுவரப்படக்கூடாது என்பதை நினைவூட்டுகிறார். 


நற்செய்தி :

இன்றைய நற்செய்தி லூக்கா நற்செய்தியாளர் மட்டும் குறிப்பிடும், நமக்கு நன்கு அறிமுகமான ‘காணாமற் போன மகன்’ (ஊதாரிப்பிள்ளை) உவமையைக் கொண்டுள்ளது. 
 
இந்த உவமையில், வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் இயேசுவின் உரையைக் கேட்க கூடுகிறார்கள்.  இது பரிசேயர்களையும் மறைநூல் அறிஞர்களையும்  முணுமுணுக்க வைக்கிறது. பாவிகளை வரவேற்று அவர்களுடன் உணவு அருந்தியதற்காக இயேசுவை கடுமையாக விமர்சிக்கிறார்கள். அவர்களின் விமர்சனத்திற்குப்  பதிலளிக்கும் விதமாக, கடவுளின் இரக்கத்தை  மற்றும் மன்னிப்பை விளக்குவதற்கு இயேசு இந்த  உவமை கூறுகிறார்.

இந்த உவமையை,  மூத்த மகன், இளைய மகன் என இரண்டு மகன்களுடன் ஒரு தந்தை ஆகிய மூவரை முக்கியக் கதாப்பாத்திரங்களைக்  கொண்டு  இயேசு இந்த உவமையை உருவாக்குகிறார்.  தந்தை செல்வந்தர். ஒருநாள் இளைய மகன் தனது தந்தையின் சொத்தில் பங்குக் கேட்டு, அதைப்  பெற்றுக்கொண்டு, தொலைதூர நாட்டிற்குச் சென்று, அதிகப்படியான மற்றும் ஆடம்பர வாழ்க்கையில் தனது செல்வத்தை வீணடிக்கிறான். ஒரு கடுமையான பஞ்சம் தாக்குகிறது, இளையவன்  மிகவும் அவமானத்துக்குரிய, ஏழ்மைச் சூழலுக்கு ஆளாகிறான்.  

பின்னர், தனது தவற்றை உணர்ந்து, ஆழ்ந்த வருத்தத்தை அனுபவித்த இளைய மகன், தனது பாவங்களை ஒப்புக்கொண்டு, இனி மகன் என்று அழைக்கத் தகுதியற்றவன் என்பதை ஒப்புக்கொண்டு, தனது தந்தையிடம் திரும்ப முடிவு செய்கிறான்.  அவர் தந்தையின் இல்லத்தை நெருங்கும் போது, அவரது தந்தை அவரை தூரத்திலிருந்து பார்த்து, அவரிடம் ஓடி, அவரைத் தழுவி, அவர் திரும்பியதை மகிழ்ச்சி பொங்க  கொண்டாடுகிறார்.

தன் தந்தையின் உடனிருந்து  உண்மையாக உழைத்து வரும் மூத்த மகன், தன் வழி தவறிய சகோதரனுக்கான கொண்டாட்டத்தைப் பற்றி அறிந்ததும் வருத்தமடைகிறான். அவர் தனது தந்தையிடம்  தனது விரக்தியை வெளிப்படுத்துகிறார்.

தந்தை, பதிலுக்கு ‘மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார்.”இன்னும் அவனுடையது என்று உறுதியளிக்கிறார். ஆனால் இழந்த மகன் திரும்பி வந்ததால் அவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று அறிவுப்புகட்டுகிறார். 


சிந்தனைக்கு :

இந்த உவமை கடவுளின் நிபந்தனையற்ற அன்பு, இரக்கம் மற்றும் மன்னிப்பு ஆகியவற்றின் உருவகமாக உள்ளது.   ஒரு பாவி மனந்திரும்பி கடவுளிடம் திரும்பும்போது விண்ணகத்தில்  இருக்கும் மகிழ்ச்சியை இந்த உவமை படம்பிடித்துக் காட்டுகிறது. இன்றைய வாசகங்களைப் பற்றி நான் சிந்திக்கும்போது, கடவுள் பாவிகளுக்காக (நீங்களும் நானும் உட்பட) நிபந்தனையற்ற, அன்பான மன்னிப்பினால் மீண்டும் அழைப்புவிடுத்துக்கொண்டே இருக்கிறார் என்பது புலனாகிறது.

ஒவ்வொரு பாவியும் அன்பான, மன்னிக்கும் கடவுளிடம் திரும்புவதற்கு அவர் ஆவலுடன் காத்திருப்பதாக  இயேசு கூறுகிறார்.    ஒரு பாவி மனந்திரும்பி கடவுளிடம்  திரும்பத் தொடங்கியவுடன்  கடவுள் பாவியை நோக்கி விரைகிறார் என்பதை ‘தந்தை' கதாப்பாத்திரம் வெளிப்படுத்துகிறது.   பாவங்களை மன்னிக்கிறார் (பொறுப்பு), மற்றும் பாவங்களை மீள முடியாத கடலின் ஆழத்தில் வீசுகிறார் (முதல் வாசகம்). வழிதவறிய மக்கள் அவரிடம் திரும்புவதைக் கொண்டாட கடவுள் ஒரு விருந்து வைக்கிறார் (மகிழ்ச்சி).

அதே வேளையில் உவமையில் வரும் மூத்த மகனையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மனந்திரும்பி, வருந்தி வரும் தன் சகோதரனை அவர் ஏற்க மறுக்கிறார். இப்போது இந்த உவமையில் யார் பாவி? 

இந்த உவமையின் வழியாக,  நாம்   நம் சொந்தக்  பாவத்தை உணர வேண்டும் என்றும் உள்ளத் தூய்மைக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்றும்  இயேசு வலியுறுத்துகிறார்.  நாம் கடவுளை நோக்கித் திரும்பினால், நம்முடைய அன்பான தந்தையாம் கடவுள் நம்மை மன்னிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பது இத்தவக்காலத்தில் நமக்கு விடுக்கப்படும் செய்தியாகும்.  இரு கரங்களையும் விரித்தவராக அவர் காத்திருக்கிறார். 
 
இறைவேண்டல்

இரக்கத்தின் ஊற்றாகிய அன்பு இயேசுவே, கணாமற்போன இளைய மகனாக நான்   தந்தையாகிய கடவுளிடம்  திரும்பி வர எனக்கு உதவிட உம்மை இறைஞ்சுகிறேன். ஆமென்.


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452