சியோல் உலக இளைஞர் தினம் 2027: பாதுகாப்பான, நிலையான திருப்பயணத்திற்கு ஏற்பாடுகள் தீவிரம் | FABC | VeritasTamil
உலக இளைஞர் தினம் (WYD) சியோல் 2027 நிகழ்விற்கான ஏற்பாடுகள் வெறும் நிர்வாக மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், உலகம் முழுவதிலுமிருந்து வரும் இளம் திருப்பயணிகளுக்கு பாதுகாப்பான, வரவேற்புமிக்க மற்றும் ஆன்மீக வளமிக்க அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று ஏற்பாட்டாளர்கள் ஆசிய திருஅவைத் தலைவர்களுக்கு உறுதியளித்துள்ளனர்.
ஜூலை 23 அன்று, ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12வது நிறைவிறுதிக்கூட்டத்தின் போது, இரவு உணவுக்குப் பின்னர் ஹோட்டல் முலியாவின் வந்தா அறையில் இடம்பெற்ற அறிமுக அமர்வில், சியோல் 2027 உலக இளைஞர் தினத்திற்கான ஏற்பாடுகள் குறித்து ஆயர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மேலும், தங்குமிடம், போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் பிற நடைமுறை அம்சங்கள் குறித்து அவர்கள் கேள்விகளை எழுப்பும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.
சியோல் துணை ஆயரும், WYD சியோல் 2027-ன் பொதுவான ஒருங்கிணைப்பாளருமான ஆயர் பால் கியுங் சாங் லீ அவர்கள் இந்நிகழ்வை வழிநடத்தினார்.
நிகழ்வை அறிமுகப்படுத்திய ஆயர் லீ அவர்கள், கொரிய கத்தோலிக்க திருஅவையின் வரலாற்றை நினைவுகூர்ந்தார். துன்புறுத்தல்கள், போர் மற்றும் அமைதி, மக்களாட்சி நோக்கிய நீண்ட பயணத்தின் வழியாக கொரிய திருஅவை வளர்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
“கொரிய திருஅவை வசதியான சூழலில் அல்ல, மாறாக துன்பத்தின் மண்ணில் வளர்ந்தது” என்று ஆயர் லீ அவர்கள் கூறினார்.
இந்த வரலாற்றின் பின்னணியில், WYD சியோல் 2027 என்பது வெறும் அனைத்துலக இளைஞர் சந்திப்பு மட்டுமல்ல என்றும், மாறாக வரலாற்றின் காயங்களிலிருந்து நம்பிக்கை எவ்வாறு உருவாகிறது என்பதையும், துன்பங்களின் நடுவிலும் விசுவாசம் எவ்வாறு வளர்கிறது என்பதையும் இளைஞர்கள் கண்டறியும் வாய்ப்பாக அமையும் என்றும் ஆயர் லீ அவர்கள் விளக்கினார்.
WYD சியோல் 2027, 2027 ஆகஸ்ட் 3 முதல் 8 வரை நடைபெறும். இதற்கு முன்னதாக, உலக இளைஞர் தினத்தின் பாரம்பரிய நிகழ்வான “மறைமாவட்டங்களில் நடைபெறும் நாட்கள்” (Days in the Dioceses), ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை இடம்பெறும்.
ஏற்பாட்டாளர்கள் பதிவு நடைமுறை குறித்து விளக்கமளித்ததுடன், சியோல் நகரின் விரிவான பொது போக்குவரத்து வசதிகள் திருப்பயணிகளின் முக்கியப் பயண வசதியாக இருக்கும் என்று தெரிவித்தனர். ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் நகரின் மெட்ரோ மற்றும் பேருந்து சேவைகளைப் பயன்படுத்துவதற்கான போக்குவரத்து அட்டை வழங்கப்படும் என்றும் கூறினர்.
உடல்நலம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் விளக்கப்பட்டன. எட்டு கத்தோலிக்க மருத்துவமனைகளின் ஆதரவு, 24 மணி நேர அவசர சேவைகள், விசா நடைமுறைகளில் தென் கொரிய அரசின் ஒத்துழைப்பு, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கும் வகையில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்கள் மற்றும் நிரப்பும் நிலையங்கள் போன்ற சுற்றுச்சூழல் முயற்சிகளும் இதில் அடங்கும்.
திறந்த கலந்துரையாடல் அமர்வில், முந்தைய உலக இளைஞர் தின அனுபவங்களை பிரதிநிதிகள் பகிர்ந்துகொண்டதுடன், நடைமுறை சவால்கள் குறித்தும் கேள்விகளை எழுப்பினர்.
லிஸ்பன் உலக இளைஞர் தினத்தின் போது இளைஞர்கள் எதிர்கொண்ட முக்கிய சவால்களில் ஒன்று, நிகழ்ச்சி அல்ல, மாறாக கைப்பேசிகளை மின்னூட்டம் செய்வதற்கான வசதிகளின் பற்றாக்குறை என்று ஒருவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த ஆயர் லீ அவர்கள், “கழிப்பறை வசதிகள், குறிப்பாக நகர்த்தக்கூடிய வசதிகள் மற்றும் கைப்பேசி மின்னூட்ட நிலையங்கள் குறித்து நாங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
தங்குமிட வசதிகள் குறித்தும் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, உறுதி செய்யப்பட்ட முன்பதிவு காலத்திற்கு ஏற்ப தங்குமிடங்கள் ஒதுக்கப்படும் என்றும், அடுத்த குழுக்களுக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்ய போதுமான கால அவகாசம் வழங்கப்படும் என்றும் ஏற்பாட்டுக் குழு விளக்கமளித்தது.
WYD சியோல் 2027 நிகழ்வில் ஏறத்தாழ 5 இலட்சம் அனைத்துலக திருப்பயணிகள் பங்கேற்பார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இருப்பினும், இறுதி எண்ணிக்கை திருப்பீடத்துடன் இணைந்து நடைபெறும் பதிவு செயல்முறையைப் பொறுத்து அமையும்.
நிகழ்வின் நிறைவில், ஆசிய திருஅவைகள் தங்கள் இளைஞர்களை இந்த அனைத்துலகச் சந்திப்பிற்காகத் தயாரிக்கத் தொடங்குமாறு ஆயர் லீ அவர்கள் அழைப்பு விடுத்தார்.
உங்கள் இளைஞர்களை வரவேற்க சியோல் தயாராக உள்ளது. உங்களை அனைவரையும் சியோலில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று ஆயர் லீ அவர்கள் அழைப்பு விடுத்தார்.
WYD சியோல் 2027 ஏற்பாடுகள், நிர்வாகத் திட்டமிடலுடன் மட்டுமல்லாமல், உள்ளூர் திருஅவைகளின் கவலைகளைக் கேட்டு, உலகம் முழுவதிலுமிருந்து வரும் இளம் கத்தோலிக்கர்களுக்கு பாதுகாப்பான, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஆன்மீக அர்த்தமுள்ள திருப்பயண அனுபவத்தை வழங்கும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகின்றன.
