டிஜிட்டல் தளங்கள் மொழி, கலாச்சாரம் மற்றும் மனித அனுபவங்களையும் பாதுகாக்கும் ஒரு கருவியாக | Veritas Tamil
வட்டார சமூகங்களின் கதைகளைப் பகிருமாறு டிஜிட்டல் மறைப்பணியாளர்களுக்கு RVA பொது மேலாளர் அழைப்பு
கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர்கள், உள்ளூர் சமூகங்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் அனுபவங்களில் வேரூன்றிய கதைகளை இணைய தளங்கள் வழியாக எடுத்துரைக்க வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஊடக நிர்வாகியுமான அருள்தந்தை ஃபெல்மர் ஃபீல், SVD தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 11 அன்று குயிசான் நகரில் நடைபெற்ற “ஆசியாவின் யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளுதல்” (Understanding Asia Realities) என்ற கலந்துரையாடலில், ரேடியோ வெரித்தாஸ் ஆசியா (Radio Veritas Asia) பொது மேலாளரான அருள்தந்தை ஃபெல்மர் ஃபீல், டிஜிட்டல் ஊடகங்களைப் பயன்படுத்தி மக்கள், சமூகங்கள், பிலிப்பைன்ஸ் கலாச்சாரம் மற்றும் வரலாறு குறித்த கதைகளைப் பகிர்ந்த தனது அனுபவங்களை எடுத்துரைத்தார்.
செப்டம்பர் 11 முதல் 13 வரை குயிசான் நகரிலுள்ள திருத்தந்தை ஐான் பால் II அரங்கில் நடைபெறும் இந்த முதல் ஆசிய கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர் பேரவை, ஆசியா முழுவதிலுமிருந்து கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர்கள், தகவல் தொடர்பாளர்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்களை ஒன்றிணைத்துள்ளது. டிஜிட்டல் சூழலில் திருச்சபை எவ்வாறு நற்செய்தியை அறிவிக்க முடியும் என்பதே இப்பேரவையின் முக்கிய நோக்கமாகும்.
மிந்தனாவோவைச் சேர்ந்த அருள்தந்தை ஃபெல்மர், ஒரு வலைப்பதிவாளராகவும் வானொலி ஒலிபரப்பாளராகவும் இருந்த தனது அனுபவத்திலிருந்தே டிஜிட்டல் கதை சொல்லலுக்கான தனது பயணம் தொடங்கியதாகக் கூறினார்.
2014ஆம் ஆண்டு செபுவில் வானொலி மறைப்பணியில் இணைந்த அவர், பல ஆண்டுகள் ஒலிபரப்புத் துறையில் பணியாற்றிய பின்னர், வானொலி நிகழ்ச்சிகளுக்கு அப்பாலும் பகிர்ந்து கொள்ளக்கூடிய கதைகளும் சிந்தனைகளும் தன்னிடம் இருப்பதை உணர்ந்தார். இதையடுத்து டிஜிட்டல் உள்ளடக்கங்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார்.
தற்போது, ரேடியோ வெரித்தாஸ் ஆசியா வழியாக ஆங்கிலத்தில் உள்ளடக்கங்களையும் சிந்தனைகளையும் உருவாக்கி வருவதுடன், செபுவானோ மொழியிலும் டிஜிட்டல் தளங்களை நடத்தி வருகிறார்.
அவரது செபுவானோ மொழி உள்ளடக்கங்களில் பிலிப்பைன்ஸ் நாட்டின் கலாச்சாரம் மற்றும் வரலாறு குறித்த கதைகளும் இடம்பெறுகின்றன. இதன் மூலம், மக்களுக்கு நன்கு பரிச்சயமான அனுபவங்களையும் விஷயங்களையும் பயன்படுத்தி அவர்களுடன் தொடர்புகொள்ள முடிகிறது.
அருள்தந்தை ஃபெல்மரின் கருத்துப்படி, டிஜிட்டல் நற்செய்திப் பணியானது வெறுமனே சமய உள்ளடக்கங்களை உருவாக்குவது மட்டுமல்ல. உள்ளூர் சமூகங்களில் ஏற்கனவே இருக்கும் கதைகளை அடையாளம் கண்டு, அவற்றை டிஜிட்டல் தளங்கள் வழியாகப் பகிர்வதும் அதில் அடங்கும்.
உள்ளூர் மக்கள், சமூகங்கள் மற்றும் அவர்களின் கலாச்சாரம் பற்றிய கதைகள், திருச்சபையின் தகவல் தொடர்புகளில் தங்களுடைய சொந்த அனுபவங்களையும் மக்கள் காண உதவுகின்றன. அதே நேரத்தில், அந்த உள்ளூர் யதார்த்தங்களைப் பரந்த பார்வையாளர்களுக்கும் அறிமுகப்படுத்துகின்றன.
வெவ்வேறு பார்வையாளர்களுக்காக வெவ்வேறு டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
தனது Facebook பதிவுகள் கத்தோலிக்கர்களை மட்டுமல்லாமல், கத்தோலிக்கர் அல்லாதவர்களையும் பிற மதங்களைச் சேர்ந்தவர்களையும் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதேவேளை, தனது YouTube சிந்தனைகள் பெரும்பாலும் கத்தோலிக்க பார்வையாளர்களை நோக்கமாகக் கொண்டவை.
இதன் மூலம், ஒரே டிஜிட்டல் மறைப்பணியானது மொழி, கலாச்சாரம் மற்றும் சென்றடைய வேண்டிய பார்வையாளர்களுக்கு ஏற்ப வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட முடிகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் செபுவானோ மொழியை அவர் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. 7,000க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட பிலிப்பைன்ஸில் நூற்றுக்கணக்கான மொழிகளும் தனித்துவமான பிராந்திய கலாச்சாரங்களும் உள்ளன. செபுவானோ மொழி மிந்தனாவோ மற்றும் மத்திய பிலிப்பைன்ஸ் பகுதிகளில் பரவலாகப் பேசப்படுகிறது.
மக்களின் சொந்த மொழியில் கதைகளைப் பகிர்வதன் மூலம், அவர்களின் அன்றாட வாழ்க்கை அனுபவங்களுக்கு இன்னும் நெருக்கமாகத் தொடர்புகொள்ள முடியும் என்று அவர் கூறினார்.
பார்வையாளர்கள் தங்களால் அடையாளம் காணக்கூடிய மற்றும் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய கதைகளைச் சொல்வதன் முக்கியத்துவத்தையும் இந்தக் கலந்துரையாடல் எடுத்துக்காட்டியது. தொலைதூர இடங்கள் அல்லது வேறுபட்ட கலாச்சாரங்களிலிருந்து வரும் கதைகளை மட்டுமே சார்ந்திருப்பதைவிட, மக்களின் சொந்த வாழ்க்கை அனுபவங்களிலிருந்து வரும் கதைகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஆசிய டிஜிட்டல் மறைப்பணியாளர்களைப் பொறுத்தவரை, அருள்தந்தை ஃபெல்மரின் அனுபவம் ஒரு முக்கியமான முன்மாதிரியை வழங்குகிறது: முதலில் உள்ளூர் சமூகங்களுக்குச் செவிசாய்த்து, அவர்களுக்கு முக்கியமான கதைகளைக் கண்டறிந்து, பின்னர் அவற்றை டிஜிட்டல் தளங்கள் வழியாகப் பகிர்வது.
டிஜிட்டல் தளங்கள், இந்தக் கதைகளைப் பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதற்கான ஒரு வழியாக மட்டுமல்லாமல், அவை உருவான மொழி, கலாச்சாரம் மற்றும் மனித அனுபவங்களையும் பாதுகாக்கும் ஒரு கருவியாக அமைய முடியும்.
இந்த அணுகுமுறையில், இலக்கு வெறுமனே அதிகமான கத்தோலிக்க உள்ளடக்கங்களை உருவாக்குவது அல்ல. திருஅவை பணியாற்றும் மக்கள் மற்றும் சமூகங்களின் உண்மையான வாழ்க்கைக் கதைகள் வழியாக விசுவாசத்தை எடுத்துரைப்பதே டிஜிட்டல் மறைப்பணியின் நோக்கமாகும்.
